Tuesday, December 02, 2014

அனாதையானேனா.......நானா.....? இல்லை நீயா....?






அனாதையானேனா.......?
நானா.....? இல்லை நீயா....?



கால்கள் ஓடிய திசையெல்லாம்
ஓடிக் களைக்கையில்....... 
காதில் சிறிது கலாச்சாரத்தையும்
பாரினிற் சிறந்த நம் பண்பாட்டையும்
தேனிற்கலந்து நம் தமிழால் தந்த
இந்த பதினாறுகால் மண்டபம்
அனாதையாக்கப் பட்டதாய் மருதன்
என்கிற இந்த மடையன் தன் மனதில்
நினைத்துக் கடக்கையில்......... 
நானா...... இல்லை நீயா........? 
என்றதொர் மனதின் மொழி
மௌனமாய் சினுங்கியது சிந்தையினில்
மண்டபத்தின் மறுமொழியாய்....!!
மண்டபம் பேசியதில் மனதில் பதிந்தது
கண் நிகழில் காணும் அறிவை மட்டுமே..... 
மதியிற் பதிக்கும் பொறி
செவியோ....... நிகழ்
நிகழ்வின் இறப்பாம் அனுபவமெனும்
பெரும் பொருள்...... அதனினும்
கடந்து நிகழவிருக்கும் எதிர்காலமெனும்
ஞானத்தையும் வள்ளுவப் பெருந்தகையின்
வாக்கிற்போல் செல்வத்திலெல்லாம்
தலையாய செல்வமாம் செவியிற் சேர
தோன்றிய நான் அழிந்தால்....... 
அழிவது நானல்ல...... நீயே.....!! 
நீயே உனது தொன்மையை இழக்கிறாய்
நீயே உனது பண்பாட்டினை இழக்கிறாய்
நீயே உனது கலாசாரத்தை இழக்கிறாய்
இறுதியாய் நீ உனது சந்ததிகளையும் இழப்பாய்......!? 
மனதில் கேட்ட மண்டபத்தின்
மௌனமொழி கேட்டு மரணித்து 
நின்றேன் மௌனியாய்.